Tamilnadu

“மும்பையோடு ஒப்பிட்டால் சென்னையே பரவாயில்லை” - முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி பேச்சு!

தன்னை பணியிடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சமீபத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானிக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், கலந்துகொண்டு பேசிய தஹில் ரமானி, பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தலைமை நீதிபதியாகப் பணியாற்றியது குறித்து பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.

மும்பையை ஒப்பிடும்போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குவதாகத் தெரிவித்தார். மேலும், சென்னையிலேயே குடியுயேற விரும்புவதால், இங்கு நிலம் வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலான காலத்தில் 5,040 வழக்குகளை முடித்து வைத்ததை நியாயமாகவே கருதுவதாகவும் அதற்கு உறுதுணையாக இருந்த நீதிபதி துரைசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் மணிக்குமார், கிருபாகரன், எம்.எஸ்.ரமேஷ், ஜெயசந்திரன், தண்டபாணி, பாரதிதாசன் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.