Tamilnadu

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : தமிழக அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த உயர்நீதிமன்றம்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எத்தனை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவப் படிப்புகளில் முறைகேடுகள் நடைபெறுவது மிகுந்த வேதனையை அளிப்பதாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, “நீட் தேர்வில் இன்னும் எத்தனை பேர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்?

நீட் தேர்வு எழுதியவரும், கல்லூரியில் சேர்ந்தவரும் ஒரே நபரா என சோதனை நடத்தப்பட்டதா?

உதித் சூர்யா என்ற மாணவர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்ததும் கல்லூரி முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்காதது உண்மைதானா?

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது?

நீட் தேர்வின்போது உரிய நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்றுகிறார்களா?”

என அடுக்கக்கடுக்காக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது தொடர்பாக நாளை (செப்.,26) தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.