Tamilnadu

ஆட்டோ ஓட்டுநரை அடித்துக்கொன்ற பள்ளி மாணவர்கள்... செங்கல்பட்டில் கொடூர சம்பவம்!

செங்கல்பட்டு தனியார் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நேற்று பிற்பகலில் பள்ளிச் சீருடையோடு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் திலீப் குமார் (35) என்பவர் ஆட்டோவில் சென்றுள்ளார்.

ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக முற்றியுள்ளது. இதையடுத்து, அந்த மாணவர்கள் ஆட்டோ ஓட்டுநர் திலீப் குமாரை சரமாரியாகத் தாக்கினர். அப்பகுதியில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தி, ஓட்டுநரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர், ஒரு மாணவன் திலீப் குமாரின் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தப்பிவிட, மற்ற இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பியோடிவிட்டனர். மாணவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் திலீப்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆட்டோ ஓட்டுநர் திலீப் குமாரின் மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் மாணவர்கள் 3 பேரையும் கைது செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களால் ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.