Tamilnadu

குடும்பத் தகராறால் தற்கொலை செய்துகொண்ட மனைவி ... வேதனை தாங்காமல் கணவரும் தூக்கிட்டு தற்கொலை!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வையகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பன் (வயது50). இவரது மனைவி தெய்வக்கனி (45). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

மகளுக்கு திருமணமாகிவிட்டது; மூத்த மகன் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றுகிறார். மற்ற 2 மகன்கள் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகின்றனர். குடிப்பழக்கம் கொண்ட மாரியப்பனுக்கும் அவரது மனைவி தேவகனிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

குடிப் பழக்கத்தால் மாரியப்பன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், குடிபழக்கத்தால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் மாரியப்பன் தொடர்ந்து குடித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 18ம் தேதி மாரியப்பனுக்கும், தேவகனிக்கும் இடையே தகராறு முற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தேவகனி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தெய்வக்கனி சாவுக்கு நீதான் காரணம் என்று உறவினர்கள் மாரியப்பனை திட்டியுள்ளனர்.

இதையடுத்து மிகுந்த வேதனையில் இருந்துவந்த மாரியப்பன், சமூகரெங்கபுரம் தொலைபேசி நிலையம் எதிரே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை அவ்வழியாகs சென்றவர்கள் பார்த்து ராதாபுரம் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலிஸார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்ப தகராறில் தம்பதியர் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.