Tamilnadu

2022ம் ஆண்டு வரை சிறுபான்மை மொழி பள்ளிகளில் தமிழ் தேர்வு எழுத விலக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு!

மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2022ஆண்டு வரை விலக்களித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழக அரசு கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியில் இருந்து கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்தது. இதில் அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிற மொழிகளில் பயிலும் மாணவர்களும் பொதுத் தேர்வுகளின் போது, தமிழ் பாடத் தேர்வை கட்டாயம் எழுதவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2015-16ம் கல்வியாண்டில் பிற மொழி மாணவர்கள் தமிழ் பாடத் தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டிலும் விலக்கு அளிக்கக் கோரி, மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், அப்துல் குத்தூஸ் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் பாட தேர்வு எழுத 2022ம் ஆண்டுவரை விலக்களித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.