Tamilnadu

“லஞ்சம், ஊழல் கொழிப்பதால் ரூ.300 கோடி நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிறுவனம்” - பால் முகவர்கள் சங்கம் புகார்!

தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. விலை உயர்வு கடந்த மாதம் 19ம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது.

இதையடுத்து, ஆவின் பால் பொருட்களின் விலையும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவின் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், அதுமட்டுமல்லாமல் லஞ்சம் ஊழல் போன்ற நடவடிக்கையினால் ஆவின் நிறுவனம் மற்றும் பால் முகவர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திப்பதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஆவின் நிறுவனம் சுமார் 300 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கியுள்ளது. முன்னதாக கடந்த 2017ம் நிதியாண்டில் ஆவின் நிறுவனம் 139 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. ஆனால் தற்போது சரிவை சந்தித்துள்ளது. இந்தச் சரிவிற்கு, லஞ்சம் ஊழல் உள்ளிட்டவையே காரணம்.

குறிப்பாக, ஆவின் மொத்த விநியோகஸ்தர்களிடம் அதிகாரிகள் லிட்டருக்கு 50 பைசா வரை மிரட்டி லஞ்சம் வாங்குகின்றனர். இதனால் முகவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த நஷ்டத்திற்கு காரணமான ஆவின் நிர்வாக இயக்குநர், பால்வளத்துறை அமைச்சர், மற்றும் செயலாளரை பதவிநீக்கம் செய்யவேண்டும். மேலும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.