Tamilnadu

வெளிநாட்டு வேலை என ஆசைகாட்டி இளைஞர்களிடம் மோசடி : சென்னை இளைஞரும், இளம்பெண்ணும் தப்பியோட்டம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வந்த தனியார் நிறுவனம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்துள்ளது.

இதனைக் கண்ட இளைஞர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறுவனத்தை அணுகியுள்ளனர். அப்போது, நிருபன் சக்கரவர்த்தி மற்றும் அருணா ஆகிய இருவரும் வேலை கிடைப்பது உறுதி என ஆசை காட்டியுள்ளனர்.

வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற ஆசையால் பட்டதாரி இளைஞர்கள் பலர், அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தியுள்ளனர். வேலைக்கு ஏற்றாற்போல, ஒவ்வொருவரிடமும் பாஸ்போர்ட்டும், 50 ஆயிரம் பணமும் முதலில் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, வெளிநாட்டில் வேலை கிடைத்ததற்கு அத்தாட்சியாக வேலை உறுதிக் கடிதத்தையும் அளித்துள்ளது அந்த நிறுவனம். பின்னர் பணம் செலுத்திய இளைஞர்களை நம்ப வைப்பதற்காக விசா நகலும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த விசா நகலில் உள்ள பதிவு எண்ணை ஆன்லைனில் சோதித்துப் பார்த்தபோது, தனது பெயருக்கு பதிலாக வேறு நபரின் விவரங்கள் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர் ஒருவர், அந்த நிறுவனத்தில் உள்ள நிருபன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட நிருபன் சக்கரவர்த்தி உடனடியாக தான் இருந்த அலுவலகத்தை காலி செய்துவிட்டு மாயமாகியுள்ளார். அருணா என்ற பெண்ணும் தப்பியோடியுள்ளார்.

இதன் பிறகு, மோசடி தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

இன்னும் பல இளைஞர்கள் மோசடி செய்யப்பட்டது குறித்து அறிந்து புகார் அளிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், பட்டதாரி இளைஞர்கள் முறையாக விசாரிக்காமல் வெளிநாட்டு வேலை என்றதும் ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து போயுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்கப்படும் என காவல்துறை கூறியுள்ளது.