Tamilnadu

அன்று ரகு... இன்று சுபஸ்ரீ... சாலையில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர் விழுந்த விபத்தில் இளம்பெண் பலி

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்திற்காக நீதிமன்ற உத்தரவை மீறி சாலையில் பேனர் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தது.

அவற்றில் இருந்து பேனர் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதனால் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. அதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சுபஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த சாலை முழுவதும் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணிகளில் ஆளும்கட்சியினர் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைத்த அதிமுகவினரை கைது செய்யாமல் காவல்துறை லாரி ஓட்டுனரை கைது செய்துள்ளது.

பேனர் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் எச்சரித்தும் ஆளும் கட்சியினர் இத்தகைய செயலை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் செயலால் மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி, இளைஞர் ரகு உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. ரகுவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, ரகு உயிரிழந்த அந்த சாலையில், Who Killed Ragu என்ற எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.