Tamilnadu

செலவுக்கு காசு தராததால் ஆத்திரம்... பெற்ற தாயை குத்திக் கொன்ற மகன் : திருப்பூரில் பயங்கரம்!

திருப்பூர் மணியக்காரன் பாளையத்தில் ஆரோக்கியமேரி என்பவரை பெற்ற மகனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோக்கிய மேரிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. இளைய மகள் கோவையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கணவன் இறந்துவிட்டதால் ஆரோக்கியமேரி அவரது பின்னலாடை நிறுவனத்தை கவனித்துக் கொண்டு, மகன் அர்ஷத்துடன் வசித்து வருகிறார்.

22 வயதாகும் அர்ஷத் எந்த வேலைக்கும் செல்லாமல் அம்மாவிடம் செலவுக்கு அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். அதேபோல், நேற்றும் செலவுக்காக பணம் கேட்டபோது, தாய் ஆரோக்கியமேரி கொடுக்க மறுத்துள்ளார். வேலைக்குச் சென்று சம்பாதித்து செலவு செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அர்ஷத், பணம் கொடுக்காவிடில் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த ஆரோக்கியமேரி தனது இளைய மகளுக்கு போன் செய்து அர்ஷத் மிரட்டுவது குறித்து தகவலளித்துள்ளார்.

இதனையடுத்து, ஆவேசமடைந்த அர்ஷத், ஆரோக்கியமேரியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு விரைந்த அக்கம்பக்கத்தினர் போலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார், ஆரோக்கியமேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பிறகு வீட்டிலேயே இருந்த அர்ஷத்தை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், அர்ஷத் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், ஆகையாலேயே எங்கும் பணிக்குச் செல்லாமல் இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.