Tamilnadu

“நீதிபதியை பழிவாங்குவதா?” : நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டவர் விஜயா கே.தஹில் ரமாணி. இவரை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த முடிவால் தஹில் ரமாணி அதிருப்தியடைந்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்தக் கோரிக்கையை கொலிஜியம் ஏற்காத நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

இந்த கடிதத்தின் மீதான முடிவு தெரியும் வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிகளை மேற்கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. திங்கட்கிழமையன்று அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிட மாற்றம் செய்வது நியாயமற்றது என வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் ஒருவர், “உச்சநீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. தலைமை நீதிபதிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். உச்சநீதிமன்ற கொலிஜியம் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கிறது. இது ஒரு பழிவாங்கும் செயல்" எனத் தெரிவித்துள்ளார்.