Tamilnadu

கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், தமிழ் வழி கல்வி பயின்றோருக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஜூன் மாதம் 23 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடாத நிலையில், ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை செல்லாது என அறிவிக்க கோரி தமிழ் வழி கல்வி பயின்ற மதுரையை சேர்ந்த தயனா உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பாணையில் தெரிவிக்காத நிலையில், தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன் அனுப்பப்பட்ட நுழைவுச் சீட்டில் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக விளக்கமளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.