Tamilnadu

தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்ற நிலத்தடி நீர்மட்டம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாடு முழுவதும் நிலத்தடி நீர் அளவு குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது. நாட்டின் பல பகுதியிலும் தண்ணீரின்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநில அரசுகள் நீர் ஆதாரங்களை உருவாக்கவில்லை என பல மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் குறித்து மாநில நிலத்தடி மற்றும் நீர் ஆதாரத் துறை ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதை அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2019 ஆகஸ்ட் வரை தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் ஏற்ற இறக்கத்தில் உள்ளதாகவும், இந்த நிலை நிடிக்குமாயின் நிச்சயம் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் நாகை, திருப்பூர், ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் தான் நிடித்தடி நீர் மட்டம் இந்த ஒருவருடத்தில் உயர்ந்துள்ளது என்றும், அதில் நாகையில் 0.32 மீட்டரும், திருப்பூரில் 0.26 மீட்டரும், ராமநாதபுரம் மற்றும் தேனியில் 0.04 மீட்டரும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இது மிகக்குறைந்த அளவாகும் எனவும் அதில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. மேலும் இந்த அளவு குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதனையடுத்து, நிலத்தடி நீர்மட்டம் மிகக் குறைந்த அளவில் இருக்கும் மாவட்டமாக பெரம்பலூர் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் 11.07 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஓராண்டில் மட்டும் 3.58 ஆக குறைந்துள்ளது. அதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.15 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் 2.84 மீட்டர் அளவுக்கு குறைந்து 7.31 மீட்டராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.