Tamilnadu

பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை... பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் மாற்றிமாற்றிக் குற்றச்சாட்டு!

மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 பயின்று வரும் மாணவி, இன்று காலை பள்ளிகள் துவங்கும் நேரத்திற்கு முன்பாகவே பள்ளிக்கு வந்து, வகுப்பறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஃபேனில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிலிருந்து வரும்போதே சேலை ஒன்றையும் மறைத்து எடுத்து வந்துள்ளார் அந்த மாணவி.

8.45 மணியளவில் வகுப்புக்கு வந்த மற்ற மாணவிகள் வகுப்பறை பூட்டியிருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது மாணவி தூக்கில் தொங்குவதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தத் தகவல் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவர அவர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

மேலும், இறந்துபோன மாணவியின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்ல முயற்சித்துள்ளனர். போலிஸார் அதனைத் தடுத்ததால் போலிஸாருக்கும் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், போலிஸார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட மாணவி, ஒரு வாரம் பள்ளிக்கு வராமல் இன்று தான் வந்துள்ளதால் வீட்டில் ஏதாவது பிரச்னை இருந்திருக்கலாம் என பள்ளி நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், வீட்டில் எந்த பிரச்னையும் இல்லை என மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.