Tamilnadu

திருமணமாகி ஒரே வாரத்தில் இளம்பெண் உயிரிழப்பு... காதல் கணவன் மீது கொலை வழக்கு - சென்னையில் பரபரப்பு!

சென்னை திரிசூலத்தில் வசித்து வரும் அபின் ராஜ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மனிஷா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி பெசண்ட் நகரில் காதல் திருமணம் நடந்துள்ளது.

திருமணமான ஏழே நாட்களில் கடந்த 31ம் தேதி அதிகாலை 2 மணியளவில் மனிஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை முருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகமடைந்த மனிஷாவின் தந்தை முருகன், தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதாக அபின்ராஜ் மீது புகார் அளித்ததன் பேரில் அவர் மீது பல்லாவரம் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் குடிபெயர்ந்த முருகன் தனது மகள், மகனுடன் வசித்து வந்துள்ளார். சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ படித்து வந்த மனிஷாவை துரத்தித் துரத்தி காதலித்த அபின்ராஜுக்கு மனிஷாவும் பச்சைக் கொடி காட்டியுள்ளார். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது தந்தையின் எதிர்ப்பை மீறி அபின்ராஜுடன் சென்றுள்ளார் மனிஷா.

திருமணம் செய்துகொள்வதாக அழைத்து வந்து உறவினர் வீடு, நண்பர் வீடு என பல இடங்களில் தங்கவைத்து அலைக்கழித்துள்ளார். இதனையடுத்து கருவுற்றிருந்த மனிஷாவுக்கும் அபின்ராஜுக்கும் அவ்வப்போது தகராறு எழுந்துள்ளது.

குடிபோதையில் இருவருக்கும் இடையே சண்டை மூண்டபோது, மனிஷாவின் வயிற்றில் அபின்ராஜ் எட்டி உதைத்ததில் அவரது கரு கலைந்ததால் மிகவும் சோர்ந்து போயிருந்தார். பின்னர், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அபின்ராஜிடம் பலமுறை வலியுறுத்தியும் அவர் சம்மதிக்காமல் தாமதித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆக.,25ம் தேதி பெசன்ட் நகரில் அபின்ராஜின் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து சரியாக திருமணமாக 7ம் நாள் மனிஷா தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை முருகனுக்கு தகவல் கிடைத்ததும் பதறியடித்துச் சென்று பார்த்தபோது மனிஷாவின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு, உடற்கூராய்வு முடிந்து, இறுதிச்சடங்கையும் நடத்திய முருகனுக்கு தனது மகளின் இறப்பில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் தங்கி இருந்த வீட்டுக்குச் சென்று சோதனையிட்டதில் செல்போன் கிடைத்துள்ளது.

அதில், அனிதா என்ற பெண்ணிடம் மனிஷா அழுது கெஞ்சிக் கொண்டிருக்கும் ஆடியோவை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், அபின்ராஜுக்கும், அனிதா என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதை அறிந்த மனிஷா தனது காதலனை விட்டுவிடுமாறு அனிதாவிடம் கெஞ்சியுள்ளார்.

இவை அனைத்தையும் கேட்ட பின்னர் அபின்ராஜ் தான் தன் மகள் மனிஷாவை கொலை செய்து தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியிருக்கக் கூடும் எனச் சந்தேகித்து போலிஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அபின்ராஜை கொலை முயற்சி வழக்கில் கைது செய்துள்ளனர்.

மணமுடிப்பதாகச் சொல்லி அழைத்து வந்து இளம்பெண்ணை ஏமாற்றிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.