Tamilnadu

வேலூர் கோட்டைக்கு அருகே வணிக வளாகம் அமைக்க எதிர்ப்பு : தொல்லியல் துறை, அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

வேலூர் கோட்டைக்கு அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் சுமார் 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்காக 219 கோடி ரூபாய் செலவில் இரண்டு மாடி கொண்ட வணிக வளாகம் கட்ட வேலூர் மாநகராட்சி ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.

தேசியச் சின்னமாக உள்ள வேலூர் கோட்டை அகழியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் வணிக வளாகம் அமையவுள்ளது என்பதே வழக்குக்கான காரணம்.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டை பகுதியில், வணிக வளாகம் கட்டத் தடை விதிக்கவேண்டும் என வேலூரைச் சேர்ந்த பசுமை பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில்ரமணி மற்றும், நீதிபதி துரைசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறை அனுமதியில்லாமல் நேதாஜி சந்தை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, செப்டம்பர் 26ம் தேதிக்குள் தொல்லியல் துறை மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் வழக்குத் தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.