Tamilnadu

திருட வந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு விட்டு 5 லட்சம் பணம், 50 பவுன் நகையைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள் !

வேலூர் மாவட்டத்தின் நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லாத சமயத்தில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இது போன்ற கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வாணியம்பாடியில் உள்ள சென்னாம்பேட்டை தக்கடி தெருவைச் சேர்ந்த பாரூக் என்ற முதியவர் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெங்களூருவில் உள்ள உறவினரின் வீட்டுக்கு குடும்பத்துடன் பாரூக் சென்றுள்ளார். இதனை பயன்படுத்தி, கொள்ளையர்கள் வீடு புகுந்துள்ளனர்.

இவற்றை ஏதும் அறிந்திராத அக்கம்பக்கத்தினர், இன்று காலை பாரூக்கின் வீட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அவருக்குத் தகவலளித்தனர். இதனையடுத்து, பாரூக்கின் உறவினர்கள் விரைந்து சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 50 சவரன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், வீட்டின் சமையலறைக்குச் சென்று பார்த்ததில் நகைகள், பணத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு காய்கறிகளை வெட்டி, மக்ரூனி சமைத்து பசி தீர உண்டுவிட்டு மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வாணியம்பாடி நகர போலிஸ் வழக்குப்பதிவு செய்தும், கைரேகை நிபுணர்களை வைத்து சம்பவம் நடந்த வீட்டில் சோதனையிட்டும் வருகின்றனர்.

பல நாட்களாக நோட்டமிட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே சென்ற பின்னர், திட்டமிட்டு சமைத்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையடித்துள்ளது அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.