Tamilnadu

“இனி கவுன்ட்டர் கிடையாது; ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்” : அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்!

தமிழகத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும்போது, சினிமா டிக்கெட்டுகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட பன்மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

பொழுதுபோக்கிற்காக திரையரங்குகளில் படம் பார்க்க வரும் மக்களுக்கு இதுபோன்ற அதிக கட்டண வசூலிப்பு அசவுகரியத்தைத் தருவது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

மேலும், தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களும் வெளியே விற்கப்படும் விலையை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக செய்தித் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சினிமா படங்களுக்காக டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் முறை விரைவில் கொண்டுவரப்படும் எனவும், அதற்கான கட்டண விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையையும் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளதாகவும், உணவுப் பொருட்களின் தரமும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

உணவுப் பொருட்களின் விலை குறித்த தகவல் பார்வையாளர்களுக்கு ஒரு வகையில் திருப்திகரமான செய்தியாக இருந்தாலும், ஆன்லைன் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட் புக்கிங் செய்ய முடியும் என்பதால் கட்டணமும், சேவைக் கட்டணமும் உயருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.