Tamilnadu

மாணவிகளை வீட்டுக்கு அழைக்கக்கூடாது : பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு!

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது அண்மைக்காலமாக பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களோ, மாணவிகளோ கல்வி தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேராசிரியர்களை அவர்களது இல்லத்தில் சந்திப்பது அல்லது, அவர்களை பேராசிரியர்கள் தங்களது இல்லத்துக்கு அழைப்பது ஆகியவை நடந்தேறி வருகின்றன.

இதுபோன்ற செயல்களால் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதால் , இனி பேராசிரியர்களின் வீட்டுக்கு கல்வி தொடர்பாக மாணவர்கள் செல்லவோ, பேராசிரியர்கள் மாணவர்களை அழைக்கவோ கூடாது என தடை விதித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக பேராசிரியர் ரீடா ஜான் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.