Tamilnadu

பொருளாதார சரிவு குறித்து விளக்கம் கேட்ட சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது பா.ஜ.கவினர் கொடூர தாக்குதல்! Video

பா.ஜ.க ஆட்சியில் ஏற்படும் குளறுபடிகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புவோர் மீதும் சுட்டிக்காட்டுபவர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் பெரும்பாலும் விட இந்தியாவில் நிகழ்ந்துவந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் தலைதூக்கி வருகிறது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், பா.ஜ.க ஆட்சியில் நடக்கும் குளறுபடிகள் குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அவர் தாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், பா.ஜ.க ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் விவகாரம், ஆர்.பி.ஐ வங்கியிடம் இருந்து கடன் பெற்றது, பொருளாதார சரிவு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளை அடுக்கினார் பியூஷ் மனுஷ். இந்த கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க முடியாத பா.ஜ.க நிர்வாகிகள் அவரை மிரட்டி, தரக்குறைவாகப் பேச ஆரம்பித்தனர்.

ஒருகட்டத்தில் அவரது கேள்விகளைச் சமாளிக்க முடியாமல் அவர் மீது தாக்குதல் நடத்தினர். பா.ஜ.கவினரின் இந்தத் தாக்குதலால் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் காயமடைந்தார். இந்தத் தாக்குதல் போலிஸார் முன்னிலையிலேயே நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

பா.ஜ.க-வினரால் தாக்குதலுக்கு உள்ளான பியூஷ் மனுஷ் மயக்கமடைந்தாகக் கூறப்படுகிறது. பியூஷ் மனுஷ் மீதான இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய பா.ஜ.க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.