Tamilnadu

“கணக்கே இல்லாத வங்கியிலிருந்து, வாங்காத கடனுக்கு நோட்டீஸ்” : திருவாரூர் விவசாயி அதிர்ச்சி!

இந்தியாவில் இயங்கி வரும் வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனத்தினரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்து வருகின்றன. வங்கிகளில் பெரும் தொகைகளைக் கடன் வாங்கிவிட்டு பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர். பலர் இந்தியாவில் இருந்தாலும் அவர்களை வங்கிகள் கண்டுகொள்வதில்லை.

ஆனால் குறைந்த அளவில் கடன் வாங்கியிருக்கும் விவசாயிகள் மீதும், கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மீதும் தான் வங்கிகள் நடவடிக்கை எடுக்கின்றன. கடனைத் திருப்பிக் கேட்டு வங்கி அதிகாரிகள் தொல்லை செய்வதால் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில், வங்கியில் கணக்கே இல்லாத விவசாயி ஒருவருக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருவாரூரைச் சேர்ந்த பாண்டியன் என்கிற விவசாயிக்கு சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் விளமல் கிளையில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸை பார்த்த விவசாயி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

விவசாயி பாண்டியன்

அந்த நோட்டீஸில், திருவாரூரைச் சேர்ந்த பாண்டியன், பாரத ஸ்டேட் வங்கியிடம் 3 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கி இருப்பதாகவும், நீண்ட நாட்களாக கடனைத் திருப்பி செலுத்தாததால் 2 சதவீத வட்டி வசூலிக்கப்பட்டுள்ளது எனவும்வும் என வங்கி நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.

மேலும், அவர் ஸ்டேட் வங்கியின் வேறொரு கிளையில் வைத்திருந்த வங்கிக் கணக்கில் இருந்து கடனைக் கட்டவில்லை எனக்கூறி 4 ஆயிரத்து 600 ரூபாய் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி பாண்டியன் வங்கி நிர்வாகத்திடம் சென்று கேட்டுள்ளார். ஆனால், வங்கி நிர்வாகம் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, விவசாயி பாண்டியன், பாரத ஸ்டேட் வங்கியின் விளமல் கிளையில் தனக்கு வங்கிக் கணக்கே இல்லை எனவும், கடன் எதுவும் வாங்காத நிலையில் கடன் வாங்கியதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் வங்கி நிர்வாகம் மீது புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்.பி.ஐ மற்றும் வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்டு பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.