Tamilnadu

1% தேர்ச்சியைத் தாண்டாத TET தேர்வு முடிவுகள் : அதிகபட்ச மதிப்பெண்ணே இவ்வளவுதான்..! : அதிர்ச்சி தகவல்!

டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர்கள் மற்றும் தேர்வு வாரியத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடைநிலை ஆசிரியராவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடந்தது. தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கான தேர்வு, நடுநிலைப் பள்ளி ஆசிரியருக்கான தேர்வு என இரண்டு தாள்களாக இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 5,42,346 பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் முதல் தாள் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 1,62,314 பேர் தேர்வு எழுதியதில் 915 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தனர். மீதமுள்ள 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் நேற்று (ஆகஸ்ட் 21) இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இரண்டாம் தாளில் 0.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3,79,733 பேரில் 348 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்தமாக இரண்டு தாள் தேர்வுகளை எழுதிய 5,42,346 பேரில், 5,41,083 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இரண்டு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 1,263 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்தமாக தேர்ச்சி பெற்றவர்கள் 1.38 சதவீதம் பேர்தான். 98.62 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். மொத்த மதிப்பெண்களான 150க்கு அதிகபட்சமாகவே 99 மதிப்பெண்கள் தான் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்யவேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.