Tamilnadu

சென்னை மெட்ரோ ரயில்களில் இலவச பயணம்? : கோளாறு சரிசெய்யப்பட்டதால் சலுகையை ரத்து செய்த மெட்ரோ நிர்வாகம் !

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் எந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் கோளாறு சரி செய்யப்படும் வரை பயணிகள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதானது. இயந்திரங்கள் பழுதால் பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.

இன்று காலை 6 மணி முதல் ஏற்பட்ட இந்த தொழில்நுட்பக் கோளாறால் பயணிகளுக்கு டோக்கன்களுக்குப் பதில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வந்தது. கைகளில் எழுதப்பட்ட பயணச் சீட்டு மூலம் மெட்ரோ ரயில் பயணிகள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், கைகளால் எழுதித் தரப்படும் பயணச்சீட்டும் இருப்பில் இல்லாததால் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் வரை பயணிகள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

முறையான பயிற்சி அற்ற ஒப்பந்த ஊழியர்கள் பராமரிப்பு பணியினை சரிவர மேற்கொள்ளாததால் இது போன்ற புதுவிதமான பிரச்னைகள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை பலரும் கண்டித்துள்ளனர். இன்றையை வருமான இழப்புக்கு யார் பொறுப்பு எனக் கேள்வி எழுப்பியுள்ள ஆர்வலர்கள், நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலை மறைக்கவே இந்த இலவச அறிவிப்பு எனவும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், டோக்கன் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலவச பயண சேவை ரத்து செய்யப்பட்டு, கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் முறை தொடங்கியுள்ளது.