Tamilnadu
“அரிவாளுடன் வீடுபுகுந்த கொள்ளையர்களை அஞ்சாமல் போராடி விரட்டிய மூத்த தம்பதியர்” - பதறவைக்கும் வீடியோ!
திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரம் என்ற என்ற கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் விவசாயி ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களை முதிய தம்பதிகள் அடித்து விரட்டிய சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது.
கல்யாணிபுரத்தில் உள்ள தனது வீட்டின் முன் நேற்று (ஆக.,11) இரவு காற்று வாங்குவதற்காக அமர்ந்திருந்தார் விவசாயி சண்முகவேலு. அப்போது முகமூடி அணிந்துவந்த கொள்ளையர்கள் இருவர் அரிவாளுடன் வீட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
நாற்காலியில் உட்கார்ந்திருந்த சண்முகவேலுவை பின்னால் இருந்து துணியால் கழுத்தை நெறித்து தாக்க, கொள்ளையன் ஒருவன் முயற்சித்தான். சத்தம் எழுப்பியதும் உள்ளிருந்து வந்த அவரது மனைவி செந்தாமரை, கொள்ளையர்களை விரட்ட கையில் கிடைத்ததை எடுத்து வீசியுள்ளார்.
அந்த சமயத்தில் அருகில் இருந்த பிளாஸ்டிக் சேர்களை கொண்டு, சரமாரியாக வீசி கொள்ளையர்களை எதிர்கொள்கிறார் சண்முகவேலு. செந்தாமரையும், சண்முகவேலுவும் கொள்ளையர்களை விரட்டுவதில் முனைப்புடன் செயல்பட்ட சமயத்தில் செந்தாமரை அணிந்திருந்த 4 சவரன் தங்கச் செயினை கொள்ளையன் பறித்திருக்கிறான். இதில், செந்தாமரைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அரிவாளைக் கொண்டு தாக்க முற்பட்டும், முதியவர்கள் அஞ்சாததால், ஒரு கட்டத்தில் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். கொள்ளையடிக்க வந்தவர்களை துணிச்சலுடன் போராடி ஒருவழியாக உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் செந்தாமரையும், சண்முகவேலுவும். கொள்ளையர்களிடம் முதியவர்கள் இருவரும் சண்டையிடும் காட்சிகள் அனைத்தும் அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக போலீசிடம் சிசிடிவி ஆதாரத்தைக் கொண்டு சண்முகவேலு புகார் அளித்திருக்கிறார். அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை நாற்காலிகளால் அடித்து விரட்டிய முதியவர்களின் துணிச்சலை போலீசார் பாராட்டியுள்ளனர். மேலும், கொள்ளையர்களை தேடும் பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.
Also Read
-
🔴#LIVE : சட்டப்பேரவை கூட்டத்தொடர் : “இனி ஆளுநர் உரை இருக்காது” - முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம்!
-
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : இனி ஆளுநர் உரைக்கு ஆப்பு.. முதலமைச்சர் கொண்டு வந்த அதிரடி தீர்மானம் என்ன?
-
சாகித்ய அகாடமி விருது நிறுத்தத்தின் எதிரொலி.. “பா.ஜ.க. அரசின் தலையில் விழுந்த இரட்டை அடி!” - முரசொலி!
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!