Tamilnadu

தந்தையால் கைவிடப்பட்ட சிறுவன் பிச்சை எடுத்த பரிதாபம் - ஓராண்டுக்கு பின் மகனை கண்டுபிடித்த தாய் !

மதுரையில் காணாமல் போன ஓராண்டுக்கு பிறகு குழந்தையும் தாயும் சேர்ந்த உணர்ச்சிகர சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் ஒரு மனைவிக்கு பிறந்த தருண் என்ற சிறுவனைக் கடந்தாண்டு பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலேயே வீட்டுச் சென்றுள்ளார் சுரேஷ் . என்ன செய்வது எங்கே செல்வது என பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த அந்த சிறுவனை பரமேஸ்வரி என்ற பெண் அழைத்துச் சென்று, மூன்று குழந்தைகளுடன் சேர்த்து தருணையும் பிச்சை எடுக்க வைத்துள்ளார். கடந்த ஒருவருடமாக தருணை பல இடங்களில் பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபடுத்தியுள்ளார்.

அப்படி கரூர் ரயில் நிலையம் அருகில் பரமேஸ்வரி நான்கு குழந்தைகளுடன் பிச்சை எடுப்பதனைக் கண்ட போலீசார், பரமேஸ்வரியிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் நான்கு பேரும் அவரின் குழந்தைகள் இல்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நான்கு குழந்தைகளையும் மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

குழந்தைகள் காப்பகத்தினார் குழந்தைகள் பற்றி விசாரித்ததில், மூன்று குழந்தைகளின் பெற்றோர் மதுரையைச் சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூன்று பேரையும் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் தருணின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து தருண் குறித்து செய்தியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் மூலம் தருண் பற்றி தெரிந்து கொண்ட வசந்தி என்பவர், தருண் தன் மகன் தான் என சொந்தம் கொண்டாடினார். வசந்தி சித்தூர் தாலுக்கா மீனாட்சிபுரத்தைச் சேர்தவர் என்றும் சுரேஷின் மனைவிகளில் ஒருவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தருண் இவ்வளவு நாட்களாக கணவர் சுரேஷிடம் இருப்பதாக நினைத்ததாகவும், தற்போது ஊடங்களில் வந்த செய்தியை கேட்டுதான் குழந்தை காணாமல் போன தகவலே தனக்கு தெரியும் எனவும் வசந்தி தெரிவித்துள்ளார். அதன்பின்னர் உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு சிறுவன் தருனை அவரது தாயார் வசந்தியிடம் ஒப்படைத்தார்கள்.

தாயைப் பார்த்த சிறுவன் தரும், “ஏன் இவ்வளவு நாளா என்னை கூப்பிட வரல” என அழுதுக்கொண்டே அவரது அம்மாவிடம் சென்றார். வசந்தியும் அவரை ஆறத்தழுவி கட்டியனைத்து அழுதார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.