Tamilnadu

சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரின் பெற்றோரை நிர்வாணப்படுத்தி கொலைவெறித் தாக்குதல்!

தருமபுரியில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரின் குடும்பத்தினரை நிர்வாணப்படுத்தி, மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் தாளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

கோமா நிலையில் அஜித் குமாரின் தாயார்

அஜித்குமார் மாற்று சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் பெற்றோர் அவர்களது காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும் அஜித்குமாரின் குடும்பத்தினரை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து விடிய விடிய அடித்ததாக கூறப்படுகிறது.

இந்த கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்த அஜித்குமாரின் தாயார் கோமா நிலைக்குச் சென்றார். பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அஜித் குமாரின் உறவினர்கள்

ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு சிறப்பு பிரிவை ஏற்படுத்து தமிழக காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வாரம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில் தருமபுரி மாவட்டத்தில் சாதி ஆணவக்கொலை முயற்சி நடந்துள்ளது பெரும் பரபரப்பையும் கிராம மக்களிடையே பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.