Tamilnadu

தண்ணீர் லாரி மோதி 1 வயது குழந்தை பலி : ஓட்டுநர் போதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜாராம் - சிந்து தம்பதி. இவர்களுக்கு ஒரு வயதில் சர்வேஸ்வரி என்ற பெண் குழந்தையும், இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளன.

ராஜாராம், மனைவி மற்றும் மகள்களோடு இருசக்கர வாகனத்தில் குன்றத்தூரில் இருந்து பல்லாவரம் நோக்கிச் சென்றுள்ளனர். பம்மல் அருகே வந்தபோது, தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

ராஜாராமின் மனைவி சிந்து பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில், ஆம்புலன்ஸ் வராததால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 20 நிமிடம் காலதாமதம் ஆகியுள்ளது. பின்னர் அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தக் கோர விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் லாரி ஓட்டுநரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.