Tamilnadu

சிறுவனின் வாயில் 526 பற்கள்! - அதிர்ந்து போன மருத்துவர்கள்

சென்னையைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனுக்கு வாயில் அதிக வீக்கமும், ரத்தக் கசிவும் ஏற்படுவதாகக் கூறி பூந்தமல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றனர்.

3 வயதில் இருந்தே சிறுவனுக்கு கீழ்தாடையில் ஏற்பட்ட வீக்கத்தால் அவதிப்பட்டுள்ளான். அந்த சமயத்தில் சிகிச்சை மேற்கொள்ள சிறுவன் ஒத்துழைக்காததால் பெற்றோரும் எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டுவிட்டனர்.

7 வயது ஆன நிலையில், சிறுவனுக்கு வலி அதிகமாகி, ரத்தமும் அதிகரித்திருக்கிற்து. இதனால் தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில் தான் சிறுவனுக்கு Compound Composite Ondontome என்ற நோய் பாதிப்பு உள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவனின் வாய் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அதில் கீழ் பல் தாடையில் பற்கள், முறையற்று வளர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை மூலம் அந்த பற்களை பிடுங்கி எடுக்க, மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி சுமார் 5 மணிநேரம் அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் தாங்கள் பார்த்ததை நம்ப முடியாமல் அதிர்ச்சியடைந்தனர். அந்த சிறுவனின் வாயில் மொத்தம் 200 கிராம் எடையுள்ள 526 பற்கள் இருந்திருக்கிறது. அவை அனைத்தையும் மருத்துவர்கள் பிடுங்கி எடுத்துள்ளனர்.

ஒருவரின் வாயில் இருந்து இவ்வளவு பற்கள் பிடுங்கி எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என, மருத்துவர்கள் வியப்பில் ஆழ்ந்தவாறு தெரிவித்தனர். அறுவை சிகிச்சைக்கு பின், அந்த சிறுவன் நலமுடன் இருக்கிறான் எனவும் கூறினர்.