Tamilnadu

ஆக்கிரமிப்புகளை மீட்க போராடிய சமூக ஆர்வலரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல் - அதிர்ச்சி சம்பவம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்கிற வீரமணி மற்றும் அவரது மகன் வாண்டு என்கிற நல்லதம்பியும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்கப் போராடி வந்தனர்.

முதலைப்பட்டியில் உள்ள 40 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புக்கு எதிராக நல்லதம்பி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பலால், வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நல்லதம்பி தொடர்ந்த வழக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது. கொலை சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.