Tamilnadu

தமிழையும், சமஸ்கிருதத்தையும் பிரிக்க முடியாது என்று பேசிய அமைச்சர் - பதவிக்காக இப்படி ஒரு பேச்சு தேவையா ?

சென்னை ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விழாவில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “ தமிழும், சமஸ்கிருதமும் கலையின் இரண்டு கண்கள். அவற்றை தனித்து பார்க்கமுடியாது. தமிழ் மற்றும் சமஸ்கிருதம் அழகிய கலைவடிவத்தை உள்ளடக்கியது. இவற்றுள் எது தொன்மையானது என்று ஆராயாமல் இரன்டு மொழிகளில் உள்ள சிறப்புகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சமஸ்கிருதத்தால் தமிழ் மொழி அழிந்து விடும் என்ற நிலை இல்லை. தமிழ் மொழியில், சமஸ்கிருதத்தை விட ஆங்கில கலப்புதான் அதிகம் உள்ளது” இவ்வாறுத் தெரிவித்தார்.

சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைத்து மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் வெகுண்டெழுந்த திராவிட இயக்கத்தினர் நடத்திய போராட்டமே தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்யும் நிலையை ஏற்படுத்தியது.

அந்த வரலாற்றில் இருந்து தோன்றிய அ.தி.மு.க எனும் கட்சியில் இருந்து அமைச்சர் ஆகி இருக்கும் மாஃபா பாண்டியராஜன், இந்தியையும் சமஸ்கிருதத்தையும் மத்திய பா.ஜ.க அரசு திணிக்க முயற்சி எடுத்தும் வரும் வேளையில் இப்படி பேசி இருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது ஆட்சியையும், அதிகாரத்தையும் காப்பாற்றிக்கொள்ள இந்த அளவிற்கு கண் மூடித்தனமாக பா.ஜ.க.,வை ஆதரிக்க வேண்டுமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.