Tamilnadu
மதுரையில் ரகசியமாக நடந்த புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு கூட்டம் : முறியடித்த ஜனநாயக அமைப்புத் தோழர்கள்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்த புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கையை மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கை இந்தியை திணிக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாக உள்ளது எனவும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த வரைவு அறிக்கை தொடர்பாக ஜூலை 31ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவகாசம் அளித்துள்ளது. இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் தமிழகத்தில் பல இடங்களில் ரகசியமாக நடத்தி வருகிறார்கள். அதுபோல ரகசியமாக நடைபெறும் கூட்டத்தை கண்டறிந்து ஜனநாயக அமைப்புகள் அதனை தடுத்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களில் கோவை, திருச்சி, சென்னை போன்ற இடங்களில் ரகசிய கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மதுரையிலும் நடந்துள்ளது. அந்த கூட்டத்தை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றைய தினம் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் இதில் தென் மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த இந்திய மாணவர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அழைக்காமல் கூட்டம் நடத்துவது ஏன் என்றும், அரசுக்கு ஆதரவானவர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்துவது தவறு என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து போராட்டம் தீவிரமாகிவிடுமோ என எண்ணி போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மத்திய பா.ஜ.க அரசின் இந்த தவறான புதிய கல்விக் கொள்கையை யாருக்கும் தெரியாமல் நடத்துவது ஜனநாயக விரோதம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு கொடுத்துள்ள அவகாசம் முடிய, 4 நாட்கள் இருக்கும் நிலையில் எப்படி பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்போகிறீர்கள், நீங்களே கருத்துக் கூறுவதற்கு எதற்கு கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துகிறீர்கள் என சரமாரியாக கேள்விகளி எழுப்பினர். நிலைமை விபரீதம் அடைவதைக் கண்ட போலிஸார், இது அதிகாரிகளுக்கான கூட்டம் என்று நழுவிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து வாலிபர் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கூட்டம் நடத்துக்கிறார்கள், கேட்டால் அதிகாரிகளுக்கான பணி குறித்து பயிற்சி கூட்டம் என்று சில்லைரைக் காரணங்களை கூறுகிறார்கள். அதிகாரிகள் கூட்டத்திற்கு எதற்கு இங்கு இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு? ஏன் மதுரை நகரில் கூட்டத்தை நடத்தாமல், ஊருக்கு வெளியே நடத்தவேண்டும்.
இதன் மூலம் மாணவர்கள் இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர் என யாரிடமும் கருத்துக்கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் வேலையை பாஜக மேற்கொண்டு வருகிறது. இதற்கு அதிமுக அரசு துணைப் போகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !