Tamilnadu

‘என்ன தேவையா இருந்தாலும், என்கிட்ட கேளுங்க’ - உதவி செய்வதாக மாரியம்மாள் குழந்தைகளிடம் உறுதியளித்த கனிமொழி

சமீபகாலங்களில் தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 23ம் தேதி தி.மு.க முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகு சங்கரன் மற்றும் அவரது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரை மர்ம நபர்கள் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பிவிட்டனர்.

இந்த படுகொலை சம்பவத்தைச் செய்த மர்ம நபர்களை கண்டுபிடிப்பதற்காக 3 தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறது காவல்துறை. இந்த நிலையில், கடந்த 24ம் தேதி தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் உயிரிழந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கும் இரங்கலும் தெரிவித்தார். மேலும், பரிதாபாக உயிரிழந்த பணிப்பெண்ணின் பிள்ளைகளுக்கு 1 லட்சம் ரூபாய் உதவித் தொகையாக அளித்துள்ளார்.

இதனையடுத்து, இன்று நெல்லையில் உள்ள உமா மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்று அவரது மற்றும் அவரின் கணவர் முருகு சங்கரின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் தி.மு.க. மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.,யுமான கனிமொழி. அதன் பின்னர், உமா மகேஸ்வரியின் வீட்டில் பரிதாபமாக படுகொலையான பணிப்பெண் மாரியம்மாளின் வீட்டுக்குச் சென்று அவரது 3 பெண்களுக்கும் கனிமொழி ஆதரவு தெரிவித்தார்.

மாரியம்மாளின் மறைவுக்கு பிறகு நிர்கதியாக இருக்கும் அவரது பெண்களுக்கு உருக்கமாக தனது ஆறுதலை தெரிவித்த கனிமொழி, அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்து ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள், நிச்சயம் உதவுகிறேன் என கனிவுடன் அப்பெண்களிடம் கூறியுள்ளார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.கவின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அனைவரிடமும் இனிமையாக பழகக் கூடியவர். கழகப் பணிகளிலும் ஈடுபாடுடன் பணியாற்றக் கூடியவர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உமா மகேஸ்வரியும் அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக இதுகாறும் எந்த நடவடிக்கையும் போலீஸ் தரப்பில் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

எந்தக் காரணமும் இல்லாமல் 3 பேரை கொன்று குவித்த குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன்னிறுத்தி தக்க தண்டனை வழங்கவேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது எனவும் கனிமொழி சாடினார். இருப்பினும், இதுவரை கொலையாளிகளை கண்டுபிடிக்காமல் தமிழக அரசும், காவல்துறையும் மெத்தனம் காட்டி வருவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதையே தெளிவாக எடுத்துரைக்கிறது என தெரிவித்தார்.