Tamilnadu

அண்ணாச்சியின் கடைசி ஆசையை கனத்த மனத்தோடு நிறைவேற்றிய சரவணபவன் ஊழியர்கள் !

இன்று சரவண பவனுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 50 உணவகங்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய சைவ உணவக பிராண்டாக வளர்ந்து நிற்கிறது சரவண பவன்.

இத்தனை பிரமாண்டமான சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய ராஜகோபால், எதையும் அனுபவிக்க முடியாமல் வழக்கில் சிக்கி, தண்டனை அனுபவிக்கும் நிலையிலேயே தற்போது காலமாகியுள்ளார். அவரது கடைசி ஆசையை இன்று நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள் அவர் உயிராக நினைத்த ‘சரவண பவன்’ உணவகத்தின் ஊழியர்கள்.

தரத்திலும், சுவையிலும் சமரசம் செய்துகொள்ளாத திட்டமிட்ட உழைப்பால் மிகவேகமாக தொழிலில் வளர்ச்சி கண்ட ‘அண்ணாச்சி’ ராஜகோபால் அதே வேகத்திலேயே நற்பெயரில் சரிவைச் சந்தித்தார்.

ஜீவஜோதியை பலவந்தப்படுத்தி திருமணம் செய்ய முயன்று, அவரது கணவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, மேல்முறையீடுகள் செய்தும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. தண்டனையை ஏற்று சிறைக்குச் செல்லாமல் மருத்துவமனையிலேயே மரணித்துள்ளார் ராஜகோபால்.

அவரது விருப்பத்தை தனது குடும்பத்தினரிடம் முன்னரே சொல்லியிருந்தாராம். அது, தான் இறந்துவிட்டால் கூட, அன்றைக்கும் சரவண பவன் உணவகங்களை திறந்து வைத்து வாடிக்கையாளர்களின் பசியாற்ற வேண்டும் என்பதுதான்.

பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தாலும், அவரது விருப்பப்படியே சரவண பவன் உணவகங்கள் அனைத்தும் திறந்தே வைக்கப்பட்டுள்ளன. இரவு 8 மணிக்குப் பிறகே உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிபெற்ற தொழிலபதிராக இருந்தாலும் வாழ்க்கையில் தோல்வியுற்ற மனிதராகியிருக்கிறார் ராஜகோபால். ஆயுள் கைதியாக உயிரை நீத்த அவரது கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள் ஊழியர்கள்.