Tamilnadu

சென்னையில் காலையில் நிகழ்ந்த சோகம் : ட்ரிப்ள்ஸ் போனதால் உயிரை விட்ட 2 இளம்பெண்கள் - ஒருவர் கவலைக்கிடம்

தமிழகத்தில் சாலை விபத்துகளினால், நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ஹெல்மெட் அணியாமல் செல்வது, சரியான சாலைவசதிகள் இல்லாதது, முறையான போக்குவரத்து வசதிகள் குறித்து ஏற்பாடு செய்யாததது என பல்வேறு காரணங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுதொடர்பான விழிப்பு உணர்வு நடவடிக்கை மேற்கொண்டாலும் விபத்துகள் குறைவதில்லை.

அந்த வகையில், சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிண்டி மேம்பாலத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற போக்குவரத்து காவலர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த சம்பம் நடைபெற்று சில நாட்கள் கூட ஆகாத நிலையில், தற்போது 2 பெண்கள் அரசு பேருந்தில் சிக்கி பலியானது, சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தி உள்ளது.

சென்னை நந்தனம் சிக்னல் பகுதியில் இன்று காலை நடந்த கோர விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்த முயன்ற இரு சக்கர வாகனம், இன்னொரு இரு சக்கர வாகனம் இடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் அதில் பயணம் செய்த மூன்று பேர் மீதும் பேருந்து ஏறியது.

இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போக்குவரத்து போலீசார் உயிரிழந்த 2 பெண்கள் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிக்கிய மாநகரப் பேருந்தை இயக்கி வந்த பேருந்து ஓட்டுநர் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் பலியான இரு பெண்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர் பவானி, நாகலட்சுமி என்பதும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியர்களாகப் பணிபுரிந்து வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது. நண்பரின் பல்சர் பைக்கில் ஆபிஸுக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் போலிஸார் தெரிவித்துள்ளனர்.