Tamilnadu

6538 பள்ளிகள் மூடப்படும் அபாயம் : சூர்யாவை திட்டும் அ.தி.மு.க அமைச்சர்களிடம் இதற்கு பதில் இருக்கிறதா ? 

இந்தியாவில் கல்வி வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் குறிப்பிடத் தகுந்த இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் தற்போது உள்ள ஆட்சியால் அந்த அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளை மூடும் வேலையை அ.தி.மு.க அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

பள்ளிகளுக்கு போதிய அடிப்படை வசதி செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறது தமிழக அரசு. இந்த சூழலில் அரசு உதவி பெரும் பள்ளிகளையும் வஞ்சிக்கும் நோக்கில், முறையாக வழங்க வேண்டிய மானியத் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் அதிகம் படிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் 5,025 தொடக்கப் பள்ளிகள், 1,513 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 6,538 அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளுக்கு தமிழக அரசு மானியம் வழங்கி வேண்டும். ஆசிரியர்களுக்கும் பள்ளி பணியாளர்களுக்கும், பள்ளி கட்டுமான மேம்பாட்டுக்கும் அரசு தான் மானியம் வழங்க வேண்டும். அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தில் 2 சதவீதம் அரசு சார்பில் மானியமாக வழங்கப்படும்.

மத்திய மாநில அரசின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மூலம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ 7 ஆயிரமும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரமும் நிர்வாக மானியம் அளிக்கப்பட்டது. இந்த மானிய தொகை 2014ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. 2017ம் ஆண்டு முதல் பள்ளிகளுக்கான மானியத்தையும் நிறுத்திவிட்டனர். இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. நிதி நெருக்கடியில் பள்ளி நிர்வாகம் தத்தளித்து வருகிறது.

தமிழகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. அரசு அளிக்கும் நிர்வாக மானியம் மற்றும் பள்ளி மானியம் அளிக்கும் தொகைக் கொண்டே நிர்வாகம் நடக்கிறது. அந்த மானியத் தொகையும் வழங்கப்படாததால், அரசிரியர்களின் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து நிர்வாகத்தை நடத்தி வேண்டிய நெருக்கடி நிலைக்கு அரசு உதவி பெரும் பள்ளிகள் தள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி சமீபத்தில் சட்டப்பேரவையில் கல்வித்துறை தாக்கல் செய்த புள்ளி விவர ஆவணத்தின் தகவலின் படி, அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 629 குறைந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 929 குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 558 பேர் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.