Tamilnadu

வீட்டுல பொண்டாட்டி, புள்ளைங்க மதிக்கல.. ஜெயிலுக்கு போவதற்காக அடிக்கடி திருடிய முதியவர் ! 

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் முதியவர் ஞானபிரகாசம். இவர் அடிக்கடி சிறை சென்று வருவது குறித்து போலிஸார் செய்த விசாரணையில், சொன்ன காரணம் போலிஸாரை வியப்படையச் செய்துள்ளது.

ஞானபிரகாசத்தை கடந்த மாதம் சி.சி.டி.வி கேமிராவை திருடியதாக வந்த புகாரில் தாம்பரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதன்பிறகு வெளியே வந்த ஞானபிரகாசம் மீண்டும் இருசக்கர வாகனத்தை திருடி அதில், சுதந்திரமாகத் திரிந்து வந்துள்ளார். பின்னர், பைக்கில் இருந்த பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் வேறொரு பைக்கில் இருந்து பெட்ரோலை திருடியிருக்கிறார். அப்போது போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

இதுகுறித்து போலிஸார் விசாரித்தபோது ஞானபிரகாசம் அளித்த வாக்குமூலத்தால் போலீசாரே வாயடைத்துப் போயுள்ளனர். என்னவென்றால், தனக்கு நிரந்தரமான வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் தன்னை மதிப்பதில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் சமீபத்தில் சிறைவாசம் கண்ட ஞானபிரகாசம் அங்கு மூன்று வேளை சாப்பாடு, நிம்மதியாக இருக்க இருப்பிடம் என கிடைத்ததால் மீண்டும் ஜெயிலுக்கே செல்ல விருப்பப்பட்டிருக்கிறார்.

அதனாலேயே மீண்டும் திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, ஞானபிரகாசத்திற்கு அறிவுரை கூறிய போலீசார் அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

ஞானப்பிரகாசம் போன்ற வேலையில்லாத நபர்களை கண்டறிந்து அரசு, உரிய பணிகளில் அமர்த்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறையவும் வாய்ப்புள்ளது என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.