Tamilnadu

“தொண்டர்களுக்காகவே நான் வாழ்கிறேன்” - ராஜ்யசபா மனு ஏற்கப்பட்ட பிறகு வைகோ உருக்கம்!

தமிழகத்தில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம், ஜூலை 24ம் தேதியுடன் நிறைவு பெறுவதையொட்டி மாநிலங்களவைக்கு 6 எம்.பிக்களை தேர்வு செய்ய வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்கள். மற்றொரு சீட் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு வழங்கப்பட்டது.

தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் வைகோ மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே தேச விரோத வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவர் மனு ஏற்றுக்கொள்ளப்படுமா எனும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. அதில் தி.மு.க வேட்பாளர்கள் இருவரின் மனுக்களும், வைகோவின் மனுவும் ஏற்கப்பட்டுள்ளன.

தனது வேட்பு மனு ஏற்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “எனது வேட்புமனு ஏற்கப்படும் என நம்பினேன். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் நானே போட்டியிடுகிறேன்.

நான் போட்டியிடுவதில் ம.தி.மு.க-வில் யாருக்கும் அதிருப்தி இல்லை. மத்திய அமைச்சர் பதவி இருமுறை வந்தபோதும் நான் மறுத்தேன். என் குடும்பத்தில் இருந்து யாரும் பதவிக்கு வரமாட்டார்கள். ம.தி.மு.க தொண்டர்களுக்காகவே நான் வாழ்கிறேன்.” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.