Tamilnadu

பேச்சுவார்த்தை நடத்த நாதியற்ற அரசா? : ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆவேசம்!

ஜாக்டோ-ஜியோ ஒருங்கி ணைப்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரத்து 400 ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தி ஜூலை 7ம் தேதி சென்னை எழிலகம் வளாகத்தில் உண்ணாநிலை அறப் போராட்டம் நடை பெற்றது.

பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக தலைவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்; வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீதான பொய் வழக்கு, பணியிடமாறுதல், பதவி உயர்வு மறுப்பு போன்ற பழிவாங்கலை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோவின் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழுவில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தினிடையே செய்தியாளர்களிடம் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது, "கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். இதற்கு செவிசாய்த்து எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த நாதியற்ற அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. இனியும் நாங்கள் பொறுத்துக்கொள்ள போவதில்லை.

எனவே உடனடியாக எங்களை அழைத்து பேச வேண்டும். எங்களை அழைத்து பேச மறுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்கள் எப்படி உங்களுக்கு இல்லாமல் போனதோ? அதே போன்று சட்டசபை தேர்தலின் போது 234 இடங்களும் உங்களுக்கு இல்லாமல் போகும். சட்டமன்றத்தில் அ.தி.மு.க. அரசு ஜீரோவாகும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.” இவ்வாறு அவர் கூறினார்.