Tamilnadu

சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்க டெண்டர் வெளியீடு: தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

சேலம் இரும்பாலை என்பது சேலத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பெருமை சேர்த்து வரும் ஆலையாகும். இந்த ஆலையை தமிழகத்தில் கடந்த 1975ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரகாந்தி ஒப்புக்கொண்டார். அப்படி பல தலைவர்கள் போராடி பெற்றதுதான் சேலம் இரும்பு உருக்கு ஆலை.

சேலம் ரயில் நிலையத்தில் இருந்த தருமபுரி செல்லும் சாலையில் 4 ஆயிரம் ஏக்கர் பரபப்பளவில் அமைந்துள்ளது, இரும்பு மற்றும் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் உள்பட உலகத் தரத்திலான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலையாக செயல்பட்டு வருகிறது.

இவ்வளவு சிறப்புகள் உள்ள இந்த சேலம் இரும்பாலைக்கு மத்திய பாஜக அரசு உந்துதல் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்தி, கடந்த 5 ஆண்டுகளாக சேலம் இரும்பாலை உள்பட சில ஆலைகளை தனியாருக்கு கொடுத்திட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு ஆலையிலும் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செயில் நிறுவனம், தனது கட்டுப்பாட்டில் உள்ள சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க உலகளாவிய டெண்டர் கோரி அறிவிப்பை வெளியிட்டது. சேலம் இரும்பாலை தனியார் மயத்தை கண்டித்து தொழிலாளர்கள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநிலங்களவையில் உள்ள தமிழக எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசு பொதுத் துறை நிறுவங்களை தனியாருக்கும் தாரைவார்க்கும் முடிவை கைவிடவேண்டும் என்று வலிறுத்தியுள்ளனர்.