Tamilnadu

சம்பளத்தில் பாதிதான் இருக்கு.. மீதி எங்கே? : போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்!

சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையில் இருந்து பேருந்துகளை எடுக்காமல் பணிக்கு செல்ல மறுத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தி ஈடுபட்டுள்ளனர். ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 30-ம் தேதி சம்பளம் போடப்பட்டு வந்த நிலையில் இன்று மாதம் பிறந்தும் சம்பளம் தரவில்லை . சம்பளம் தருவதற்கு நிர்வாகம் தரப்பில் பணம் இல்லை என்று கூறி 60% இப்போது தருவதாகவும் மீதி 40 சதவீத சம்பளம் எப்போது தருவோம் என்று கூறவில்லை.

இதுகுறித்து தொழிலாளர்கள் கேள்விப்பட்டதும் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். சம்பளத்தை கொடுத்தால் வாகனத்தை ஓட்ட தயார் என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது,” போக்குவரத்து நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுத்து 60% சம்பளம் தருவதாகக் கூறியுள்ள நிலையில், 40% எப்படி தருவோம் என்று சொல்லவில்லை. அதனுடைய வெளிப்பாடுதான் இன்று தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஆப்ஷன் போட்டு சம்பளம் பிடித்தம் நடைபெற்று வருகிறது. இதே முறையை பின்பற்றுகின்றனர். இதனால் தொழிலாளர்களின் நிலைமை மோசமாக உள்ளது.

இதற்கு தீர்வு காணும்வகையில் தொழிலாளர்களின் வயிற்றெரிச்சலின் வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம் பேருந்துகளை நாங்கள் எடுக்க வேண்டுமென்றால் சம்பளம் குறித்து ஒரு முடிவு தெரிந்தாகவேண்டும் இன்றைக்கே சம்பளம் தருவேன் என்று கூறினால் வண்டியை எடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறினர்.

இதனால் வடபழனி, அண்ணாநகர், பெரம்பூர், பூந்தமல்லி, அம்பத்தூரில் மாநகர பேருந்துகளை பணிமனையில் இருந்து இயக்காமல் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் பணிமனையின் முன்பு கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், போக்குவரத்துத்துறை இன்று இரவுக்குள் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஊழியர்கள் தற்போது போராட்டத்தை வாபஸ் பெற்று, பேருந்தை இயக்கத் தொடங்கியுள்ளனர்.