Tamilnadu

தகுதியற்ற பேராசிரியர்களை பணி அமர்த்தினால் அங்கீகாரம் ரத்து: காமராஜர் பல்கலை., எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் இயங்கிவரும் பல கல்வி நிறுவனங்களில் குறைந்த சம்பளத்திற்கு தகுதி பெறாத பேராசிரியர்களை நியமனம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மாநில கல்வித்துறை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்தியா பல்கலைக்கழக மானியக் குழு கடந்த மாதம் பல்கலைக்கழங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அந்த சுற்றறிக்கையில்,"இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நெட் மற்றும் செட் (NET / SET) தேர்வுகளில் தகுதி பெற்ற பேராசிரியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தது.

தற்போது இந்த சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி, 113 உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கையின் படி அனைத்து பல்கலைக்கழகங்களும், தங்களது உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இருப்பினும், குறைவான ஊதியத்தில் தகுதியற்ற பேராசிரியர்களைக் கொண்டு கல்லூரியில் பாடம் நடத்தப்படுவது குறித்து புகார்கள் எழுந்துள்ளது. அப்படி தகுதியற்ற பேராசிரியர்களை பணியில் வைத்திருக்கும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.