Tamilnadu

நீதிமன்றத்தை வசைபாடிய ஹெச்.ராஜாவிற்கு ஒரு நீதி, நியாயம் கேட்ட நந்தினிக்கு ஒரு நீதியா ?

அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருபவர் நந்தினி. 2014ல் டாஸ்மாக் கடையை எதிர்த்து துண்டு பிரசுரம் விநியோகித்ததற்கு, அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கு நேற்றைய தினம் சிவகங்கை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அந்த விசாரணையின் போது நீதிபதிகளிடம் நந்தினி நேரடியாக வாதாடினார். ” IPC 328ன் படி டாஸ்மாக் மூலம் போதை பொருள் விற்பது குற்றமில்லையா?. டாஸ்மாக்கில் விற்பனை செய்வது போதை பொருளா? உணவு பொருளா? இல்லை மருந்து பொருளா?” என கடுமையான கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து நந்தினி வாதிட்டதையடுத்து, அவர் மீதும், அவரது தந்தை ஆனந்தன் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஜூலை 9ம் தேதி வரை நந்தினியை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். வருகிற ஜூலை 5 ஆம் தேதி நந்தினிக்கு திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் வசைபாடினார். அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை, உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டதால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், நியாமான கேள்வி கேட்ட நந்தினிக்கு சிறைத்தண்டனை கொடுத்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கையே என கூறப்படுகிறது. இந்நிலையில் நந்தினியை விடுதலை செய்ய வேண்டும் என இணையதளத்தில் #ReleaseNandhini என்கிற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.