Tamilnadu

துவங்கியது ரயில்களில் தீபாவளி முன்பதிவு : ஜெட் வேகத்தில் காலியானதால் பயணிகள் ஏமாற்றம்!

தீபாவளி ரயில் முன்பதிவு இன்று (ஜூன் 27) துவங்கியது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்ல பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பதிவு டிக்கெட் முடிவடைந்ததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வேலை, தொழில், படிப்பு ஆகியவற்றிற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தங்கியுள்ள மக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.

வழக்கமாக 120 நாட்கள் முன்னதாக ரயில்களில் முன்பதிவு துவங்கும். தீபாவளிக்காக அக்டோபர் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரயிலில் செல்ல ஜூன் 27-ம் தேதி முன்பதிவு செய்யலாம். இந்நிலையில், தீபாவளிக்கு வெளியூர்களுக்குச் செல்ல விரைவு ரயில்களில் டிக்கெட் காலியாகிவிட்டன.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரயில்வே துறை போதிய சிறப்பு ரயில்களை இயக்கவில்லை. லாப நோக்கத்தோடு பிரிமியம் ரயில்களை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை.

இந்த ஆண்டு தீபாவளி முன்பதிவு டிக்கெட் உடனே காலியாகிவிட்டதால் தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.