Tamilnadu

காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்தின் காவிரி உரிமைக்கு எழுதப்பட்ட முடிவுரையா? : வேல்முருகன்

தமிழகத்திற்கான நீரை விடுவிக்காமல் மத்திய அரசு இப்பிரச்னையை மிக எளிதாக கடந்துபோவதைப் பார்த்தால் தமிழகத்தின் காவிரி உரிமைக்கு எழுதப்பட்ட முடிவுரைதான் காவிரி மேலாண்மை ஆணையமோ என்ற கேள்வி எழுகிறது எனக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

அதில், ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவேண்டும். ஆனால், 2014-ம் ஆண்டின் மத்தியில் பா.ஜ.க ஆட்சி ஏற்பட்டதிலிருந்து ஜூன் 12-ம் தேதி அணை திறப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. காவிரி உரிமை தமிழகத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் உச்சநீதிமன்றத்தின் துணையுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது தமிழகத்தின் காவிரி உரிமைக்கு எழுதப்பட்ட முடிவுரையாகவே படுகிறது.

தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்னும் அடையாளத்தை அழித்து, தமிழ்நிலத்தைப் பாலைவனமாக்கி, அணுவுலை, அணுக்கழிவு மையம், மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் ஆகியவற்றிற்காக மட்டும் பயன்படுத்துவதே அவர்களது குறிக்கோள். இதில் தமிழக அரசைக் கொண்டே நம் கண்ணைக் குத்த வைத்திருக்கிறார் மோடி.

கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் தமிழகத்துக்கு எதிராகவுமே பிரச்னையைக் கொண்டுசென்று இப்போது முடிவுரை எழுதப்பட்டிருக்கிறது. தான் எழுதிய இந்த முடிவுரையை மத்திய அரசே கிழித்தெறிந்துவிட்டு பாரபட்சமின்றி நீதியை நிலைநாட்டவேண்டும். என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.