Tamilnadu

சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள் சாலையில் உருண்டுப் போராட்டம்: அதிர்ந்துபோன கிராம மக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோடங்கிப்பட்டியில் பஞ்சாயத்து ஒன்றியத்தின் ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்வதற்கு 12.கி.மீ தொலைவில் விருதுநகரில் இருந்து மட்டும்தான் தரமான சாலை உள்ளது.

இந்த பகுதியில் சாலைகள் போடப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கினறார். சாலை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் உள்ளூரில் இருந்து கிளம்பி விருதுநகருக்கு சென்று படிக்க வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது.

மேலும் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்களுக்கு உடல்நிலை பிரச்சனை என்றாலும் கூட இந்த சாலையில் பயணித்து தான் செல்லவேண்டியதுள்ளது. இதனால் சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் கூட உருவாகியுள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வரவ முடியாத மோசமான சாலையாக தான் இந்த சாலை உள்ளது. அந்த கிராம மக்கள் தொழில் தொடங்குவதற்கு கூட சிரமப்படுகின்றார்.

அத்தியாவசிய பொருட்களை எளிதில் பெற முடியவில்லை என கிராம மக்கள் பெரும் வேதனை அடைக்கினறார். மேலும் சாலை அமைக்க கோரி பல முறை மனுகொடுத்தும் எந்த பயனும் இல்லை. சாலை அமைப்பதாக சொல்லி அதிகாரிகள் தொடர்ந்து ஏமாற்றிவருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த சாலை வழியாக மாணவர்கள் செல்வதற்கு பெரும் சிரமம் அடைகின்றார். அவ்வப்போது சிறு காயங்கள் கூட அந்த சாலையால் ஏற்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தன்னெழுச்சியான போராட்டத்திற்கு முடிவு செய்துள்ளனர். சாலை அமைத்து கொடுக்க வலியுறுத்தி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது சீருடையுடன் கரடுமுரடான சாலையில் உருண்டுப் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் இந்த போராட்டத்தை பார்த்து அதிர்ந்து போன கிராம மக்கள் அதே சாலையில் அமர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலை அமைத்து தர வலியுறுத்தியும், கிராமத்தில் இருந்து கூடுதல் அரசு பேருந்து இயக்கவும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். இந்த போராட்டம் குறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து பலரும் மாணவர்களை பாராட்டி போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகினறார்.