Tamilnadu

ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு : விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றம்!

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 100-வது நாளன்று பேரணியாகத் திரண்ட மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி கலைத்தது காவல்துறை. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

நீதிபதி சத்தியநாராயணன் தற்போது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆஷா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

நீதிபதி சசிதரன், தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்து வழக்கிலிருந்து விலகியுள்ளார். மேலும், வேறு அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு இந்த வழக்கினை விசாரிக்கும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.