Tamilnadu

தாழ்த்தப்பட்டோர் மீது நள்ளிரவில் தாக்குதல்: திருமங்கலம் அருகே ஆதிக்கசாதியினர் வெறிச்செயல்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வளையபட்டி கிராமத்தில் நள்ளிரவில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது ஆதிக்க சமூகத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வளையபட்டி கிராமத்தின் கோவில் திருவிழாவில் தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று காப்புக்கட்டி திருவிழா ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த தேவேந்திர குல வேளாளர் மற்றும் அருந்ததியர் மக்களிடம் திருவிழாவிற்கு வரக்கூடாது என்று ஆதிக்க சாதியினர் மிரட்டியுள்ளனர்.

அனுமதி பெறாமல் வளையபட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்ததை காவல்துறை தடுத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு தடுக்கப்பட்டதற்கு தேவேந்திர குல வேளாளர்களும் அருந்ததியர்களும் தான் காரணம் என ஆதிக்க சமூகத்தினர் நேற்று நள்ளிரவு கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15-க்கும் மேற்பட்ட வீடுகள், இருசக்கர வாகனங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதுபற்றி அறிந்து அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் சிலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நாகையாபுரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.