Tamilnadu

திருச்சியில் இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு! 

பள்ளிக் கல்வியில் மும்மொழிக் கொள்கையை கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரைத்ததற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது இந்தியைத் திணிக்கும் முயற்சி எனப் பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், திருச்சி விமான நிலையம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் உள்ள சர்வதேச விமானநிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெயர்ப் பலகைகளில் எழுத்தப்பட்டிருந்த இந்தி எழுத்துகள் கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளன.

திருச்சி கன்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் இந்தி எழுத்துகளை நள்ளிரவில் சிலர் கறுப்பு மை பூசி அழித்துள்ளனர். அதேபோல, திருச்சி தலைமை தபால் அலுவலகம் மற்றும் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதிகளிலும் பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை கறுப்பு மை பூசி அழித்துள்ளனர்.

விமானநிலையம் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டமும், கண்காணிப்பும் உள்ள பகுதி. அங்கும் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு எந்த அமைப்பும் அழைப்பு விடுக்காத சூழலில் அழித்தது யார் என்பதில் மர்மம் நிலவுகிறது.