Tamilnadu

தமிழகத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் தற்கொலை : நீட் தேர்வு தோல்வியால் சோகம்!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் எனும் அநீதித் தேர்வால் சிதைக்கப்பட்டிருக்கின்றன பெரும்பாலான மாணவர்களின் கனவுகள்.

நீட் தேர்வால் அரியலூரைச் சேர்ந்த அனிதா, விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா ஆகிய மாணவிகள் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்திவருகிறது மத்திய அரசு. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

நீட் தேர்வு எழுதிய தமிழகத்தைச் சேர்ந்தோரில் சரிபாதிப்பேர் தோல்வியடைந்துள்ளனர். இந்நிலையில், தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் தமிழகத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ 12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்ணுக்கு 490 மதிபெண்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் இன்று வெளியான நீட் தேர்வு முடிவில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.