Tamilnadu

"உணர்வு ரீதியாக அவர் இன்றும் உள்ளார்" கலைஞர் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து உருக்கம்!

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கட்சி தலைவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் இனிப்புகள் வழங்கி, மரக்கன்று மற்றும் மக்கள் பயனடையும் நலத்திட்ட உதவிகள் என தி.மு.க தொண்டர்கள் செய்துவருகின்றார்.

இதனைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது. "முத்தமிழ் அறிஞர் கலைஞர் இல்லாத தமிழ்நாடு என்று யாரும் கருதிவிடக்கூடாது, உடல் ரீதியாக அவர் இல்லை என்று விஞ்ஞானம் ஒப்புக்கொள்ளும், உணர்வு ரீதியாக அவர் இன்றும் உள்ளார். அவர் ஏந்தி கொடுத்த ஜோதியை தமிழன் இன்னும் 100 ஆண்டுகள் தாங்கிப்பிடித்து ஓடிக்கொண்டிருப்பான்.

திருவாரூரில் பள்ளியில் படிக்க போராட்டம், கல்லக்குடியில் தமிழ் மொழிக்காக போராட்டம், ஆட்சிக்கு வந்த போது போராட்டம், இப்படி வாழ்வில் மட்டும் அல்ல வாழ்ந்து முடித்த பின்னரும் தளபதியின் போராட்டத்திற்கு பின்னர் தான் இடம் கூட கிடைத்தது. வாழ்வில் போராட்டம் என்ற கொள்கையில் இருந்து இளைஞர்கள் பின்வாங்கவே கூடாது. என தெரிவித்தார்.

இந்தி மொழி கட்டாயம் மற்றும் திணிப்பு குறித்த பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பினார். அந்த கேள்விக்கு, "தமிழனுக்கு இந்தி எதிர்ப்பு என்பது புதிதல்ல. தமிழர்கள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றும் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பது செய்தி அல்ல, மாறாக இன்றும் வடக்கு இந்தியை திணிக்க பின்வாங்கவில்லை என்பதே செய்தி. இதற்கு நிரந்தர தீர்வு அண்ணா கூறிய இரு மொழி கொள்கையை நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்தார்.