Tamilnadu

அடுத்தடுத்து பா.ஜ.க வெறியாட்டம் : மாட்டுக்கறி உண்பது பற்றி பதிவிட்ட பேராசிரியர் கைது!

ஜார்கண்ட் மாநிலத்தில் சக்ஷி மாவட்டத்தில் 2017ம் ஆண்டு பேராசிரியர் ஜீத்ராய் ஹன்ஸ்டா மாட்டுக்கறி உண்பது எனது உரிமை, அதை உண்பதில் தவறில்லை என பதிவு செய்தற்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரது வழக்கறிஞர் கூறியதாவது;

சக்ஷி நகர் அரசு மகளிர் பள்ளி மற்றும் கல்லூரியில் பேராசியாராக பணியாற்றுபவர் ஜீத்ராய் ஹன்ஸ்டா. இவர் ஆதிவாசி மக்களின் சமூக செயற்பாட்டாளராகப் பணியாற்றி வருகிறார். நாடக் கலைஞரும் கூட. தொடர்ந்து ஆதிவாசி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தியவர். இவர் இந்திய முழுவதும் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டது குறித்து அரசுக்கு எதிராக போராட்டம், கண்டனங்கள் எழுப்பியவர். அப்படி கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது முகநூல் பக்கத்தில் மாட்டுக்கறி உணவு குறித்து கருத்து ஒன்றை பதிவு செய்தார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்த கருத்துக்கு கைது செய்திதிருப்பதாக போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர். அவர் பதிவில் ஆதிவாசி சமூகம் பாரம்பரியமாக மாட்டிறைச்சியை உணவாக பயன்படுத்துகிறோம். மாட்டுக்கறி என்பது எங்கள் ஜனநாயக உரிமை ஏன் கலாசாரமும் கூட.

இந்தியாவின் சட்டங்கள் மாட்டுக்கறி உண்பதை எதிர்க்கிறது. இந்திய அரசாங்கம் எங்கள் உணர்வுகளை மதிக்கவில்லை என்று தோன்றுகிறது. இந்தியாவின் தேசிய பறவை மயில் தான் எங்களுக்கும் தேசிய பறவை. அரசின் சில சட்டங்களை நாங்களும் பின்தொடருகிறோம். எனத் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்த பதிவிற்கு அவர் மீது இந்திய குற்றவியல் பிரிவின் (IPC) 153 (A), 295A, 505 பிரிவுகளின் கீழ், மத உணர்ச்சிகளை அவமதித்தல், மக்களுக்கிடையே பகைமையை வளர்ப்பதற்கான முயற்சி என வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடுத்ததாக பா.ஜ.க மாணவர் அணியினர் (ABVP ) கல்லூரி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி முதல்வரை வற்புத்தியுள்ளனர்.

மேலும் 2017-ம் ஆண்டு பதிவிட்டதற்கு தற்போது கைது செய்திருப்பது திட்டமிட்ட சதி வேலை. தேர்தல் அடுத்தாண்டு வந்துவிடும் இப்போது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் வாக்கு பாதிக்கப்படும் என்று அமைதி காத்துவிட்டு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.